பிரதான வங்கியியல் வளர்ச்சி மற்றும் இலாபகரத்தன்மை
2020 ஆம் ஆண்டின் முதல் காலாண்டை உறுதியான முறையில் ஆரம்பித்திருந்த போதிலும், உலகளாவிய ரீதியில் தொற்று பரவி வரும் நிலையில், யூனியன் வங்கியின் பிரதான வங்கியியல் வளர்ச்சி என்பது மார்ச் மாதத்தின் மையப்பகுதி முதல், முதல் காலாண்டின் இறுதி வரை சுருக்கமடைந்துள்ளது. இந்த சவால்கள் நிறைந்த சூழலில், மோசமடைந்துள்ள பொருளாதார சூழலில் சரணடைந்துள்ளதை அவதானிக்க முடிவதுடன், செலவு தணிப்பு மற்றும் இலாகா சேமிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் வங்கி தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருகின்றது.
வங்கியின் தேறிய வட்டி வருமானம் (NII), குறைந்த கடன் வளர்ச்சி மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகம் செய்யப்பட்ட குறைந்தளவு கடன் வழங்கல் வீதங்கள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தது. இதன் பெறுபேறாக, வங்கியின் NII பெறுமதி, முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 2 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து, ரூ. 1,031 மில்லியனாக பதிவாகியிருந்தது. வினைத்திறன் வாய்ந்த நிதி முகாமைத்துவ மூலோபாயங்கள் மற்றும் சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் உரிய காலப்பகுதியில் மீள் விலையிடல் காரணமாக, சவால்கள் நிறைந்த சூழலிலும் NII ஐ நிலையாக பேணிக் கொள்வதில் பங்களிப்பு செய்திருந்தது.
வங்கியின் கூலி மற்றும் தரகு வருமானம் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 8% இனால் குறைவடைந்து ரூ. 201 மில்லியனாக பதிவாகியிருந்தது. காலாண்டின் பிற்பகுதியில் COVID-19 காரணமாக அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட கடன் மீதான நிவாரணம் வழங்கல் தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வியாபாரங்களில் வீழ்ச்சி ஏற்பட்டமையால் கடன் தொடர்பான தயாரிப்புகளில் செயற்பாடுகள் குறைவடைந்திருந்தமை போன்றன இதில் பங்களிப்பு வழங்கியிருந்தன. எவ்வாறாயினும், நோக்குடைய கையகப்படுத்தல் காரணமாக கடன் அட்டைகள் மீதான கூலி வருமதி அதிகரித்திருந்தது. இதன் காரணமாக, ஏனைய கூலி தொடர்பான வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி நிவர்த்தி செய்யப்பட்டிருந்தது.
வங்கியின் திறைசேரி குறிப்பிடத்தக்களவு பெறுபேறை பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இந்தப் பெறுமதி ரூ. 119 மில்லியனால் அதிகரித்திருந்தது. வட்டி வீதங்களில் சாதகமான அசைவுகளின் காரணமாக பதிவாகியிருந்த மூலதன வருமதிகள் இதில் பங்களிப்பு வழங்கியிருந்தன. வங்கியின் இதர தொழிற்படு வருமானம் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. இக்காலப்பகுதிக்கான வங்கியின் தொழிற்படு வருமானம் ரூ. 1,498 மில்லியனாக பதிவாகியிருந்தது.
தொழிற்பாட்டு வினைத்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியிருந்தமையால், வங்கியின் தொழிற்படு செலவுகள் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 5% அதிகரிப்பை மாத்திரம் பதிவு செய்து, ரூ. 1,001 மில்லியனாக பதிவாகியிருந்தது.
இக்காலப்பகுதியில் வங்கியின் முன்-வலுக்குறைப்பு இலாபம் ரூ. 498 மில்லியனாக பதிவாகியிருந்ததுடன், முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 20% வளர்ச்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.
அறிக்கையிடப்பட்ட காலப்பகுதியில் நிலவிய அழுத்தம் நிறைந்த பொருளாதார சூழ்நிலை, மார்ச் மாதம் நடுப்பகுதியில் மேலும் மோசமடைந்து, நாடு முழுவதிலும் வியாபாரங்களின் பணப்பாய்ச்சல்களில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தன. அதன் பிரகாரம், வலுக்குறைப்பு முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 81% இனால் அதிகரித்து ரூ. 93 மில்லியனாக பதிவாகியிருந்தது. துறையின் பிரகாரம், வங்கியின் நிகர NPL விகிதம் 5.11% ஆக பதிவாகியிருந்தது. தேறிய NPL விகிதம் 3.37% ஆகே பதிவாகியிருந்தது.
தொழிற்படும் சூழலில் காணப்படும் சவால்கள் காரணமாக யூனியன் வங்கி மந்தமான வரிக்கு முந்திய இலாப பெறுமதியான ரூ. 405 மில்லியனை இந்த காலப்பகுதியில் பதிவு செய்திருந்தது. வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 180 மில்லியனாகும். வங்கியின் மொத்த பரிபூரண வருமானம் ரூ. 240 மில்லியனாகும்.
2020 மார்ச் 31ஆம் திகதி, வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 131,195 மில்லியனாகும். இக்காலப்பகுதியில் வங்கியின் கடன்கள் மற்றும் வருமதிகள் ரூ. 78,266 மில்லியனாக பதிவாகியிருந்தது. வைப்பு இருப்பு ரூ. 83,924 மில்லியனாகும். மொத்த சராசரி CASA பெறுமதி ரூ. 20,010 மில்லியனாக அதிகரித்திருந்தது. ஆரோக்கியமான CASA உட்பாய்ச்சலை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிக்கு, தனிநபர், கூட்டாண்மை மற்றும் SME வங்கியியல் பிரிவுகளின் முறையான நோக்குடைய கையகப்படுத்தல் மூலோபாயங்கள் பங்களிப்பு வழங்கியிருந்தன.
உறுதியான மூலதன விகிதங்களை தொடர்ச்சியாக பேணுவது நிர்வாகத்தின் முன்னுரிமைச் செயற்பாடாக அமைந்திருக்கும். 2020 மார்ச் 31ஆம் திகதியன்று யூனியன் வங்கியின் மொத்த மூலதன போதுமை விகிதம் 15.81% ஆக பதிவாகியிருந்ததுடன், இது 15.81% ஆகும், இது ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை விட உயர்ந்த பெறுமதியாகும்.
இக்காலப்பகுதியில், வங்கி மற்றும் அதன் இரு துணை நிறுவனங்களான நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் மற்றும் UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் ஆகியவற்றைக் கொண்ட குழுமம், வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 195 மில்லியனை பதிவு செய்திருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துக்கள் பெறுமதி ரூ. 139,206 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் 94% ஐ வங்கி பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தது. காலாண்டின் நிறைவில் குழுமம் ஆரோக்கியமான பிரதான மூலதன விகிதமான 15.50% ஐ பேணியிருந்தது.
செயற்பாட்டு வினைத்திறன்
Covid-19 தொற்று காரணமாக மார்ச் மாதம் மையப்பகுதி முதல் அமுலுக்கு வந்த செயற்பாட்டு சூழல் மாற்றங்கள் காரணமாக வங்கியின் தொழிற்பாட்டு வினைத்திறன் பாதிக்கப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்கள் எதிர்கொண்டிருந்த சவால்களை யூனியன் வங்கி இனங்கண்டு, இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்த நிவாரண திட்டத்தை உடனடியாக அமுலாக்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இதனூடாக வாடிக்கையாளர்க்கு மத்திய கால அடிப்படையில் எழக்கூடிய நிதசார் பாதிப்புகளிலிருந்து மீட்சியடைவதற்கு உதவியளித்திருந்தது. கூட்டாண்மை, SME மற்றும் தனிநபர் வங்கியியல் வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு வங்கியின் நிவாரண பொதி வழங்கப்பட்டிருந்தது.
சவால்கள் காணப்பட்ட போதிலும், கூட்டாண்மை வங்கியியல் வியாபாரம் தொடர்ந்து தனது இலாகாவை தக்கவைத்திருந்தது. ஆனாலும், வட்டி வருமானம் மார்ச் மாத இறுதியில் சுருக்கமடைந்திருந்தது. சவால்கள் நிறைந்த பொருளாதார சூழலில் சிறிய மற்றும் நடுத்தரளவு வியாபாரங்கள் (SMEs) அதிகளவு பாதிக்கப்பட்டிருந்தன. இலங்கை மத்திய வங்கி அறிவித்திருந்த நிவாரண திட்டத்தை அறிமுகம் செய்திருந்ததுடன், மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய தீர்வுகள் மற்றும் ஆலோசனை சேவைகள் போன்றவற்றினூடாக தமது கூட்டாண்மை மற்றும் SME வாடிக்கையாளர்களுக்கு யூனியன் வங்கி உதவிகளை வழங்கியிருந்தது. நிவாரண திட்டங்களின் போது, கடன் மீளச் செலுத்தும் சலுகைக் காலம் மற்றும் மீளச் செலுத்தும் காலத்தை நீடிப்பது போன்ற சலுகைகளை வங்கி வாடிக்கையாளர்களுக்கு வழங்கியிருந்தது. சுற்றுலாத்துறை, ஆடைத்தொழிற்துறை, பெருந்தோட்டங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சரக்கு கையாளல் சேவைகள் துறைகள் போன்ற நேரடி மற்றும் மறைமுக ஏற்றுமதி தொடர்புடைய வியாபாரங்கள் மற்றும் கடன் மீளச் செலுத்தலுக்கு தகைமை பெறும் அனைத்து தரப்பினருக்கும் யூனியன் வங்கி ஆறு (06) மாதங்கள் வரை வட்டி மற்றும் முதலுக்கு சலுகைக் காலத்தை வழங்கியிருந்தது; விவசாயம், உற்பத்தி, சேவைகள், நிர்மாணம் மற்றும் வியாபார துறைகள் போன்ற துறைகளைச் சேர்ந்த SMEகளுக்கு கிளைகள் மற்றும் உறவு பேண் முகாமையாளர்களினூடாக நிவாரணச் சலுகை வழங்கப்பட்டிருந்தது. SMEகள் மற்றும் சிறியளவிலான வியாபாரங்களுக்கு உடனடி நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கில், காசோலை திரும்பல்களின் மீது கட்டண அறவீடு மற்றும் கொடுப்பனவுகள் நிறுத்துகை போன்றவற்றுக்கான கட்டணங்கள் 2020 செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு நீக்கப்பட்டுள்ளன. ரூ. 500,000 க்கு குறைவான வழங்கப்பட்ட காசோலைகளுக்கான சலுகைக் காலம் மே 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளன.
மீளாய்வுக்குட்பட்ட காலப்பகுதியில், சிறியளவிலான கடன்கள் மற்றும் முற்பணங்கள் போன்றன நடுத்தரளவு வளர்ச்சியை பதிவு செய்திருந்தன. வங்கியின் கடனட்டை பிரிவு, குறைந்த வேகத்தில் விரிவடைந்திருந்தது. இதில், பொருத்தமான சலுகைகள் மற்றும் தொடர்ச்சியான பெறுமதிகள் போன்றன பங்களிப்பு வழங்கியிருந்தன. தொற்றுப் பரவல் காரணமாக வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கியிருந்த சவால் நிறைந்த சூழலை கவனத்தில் கொண்டு, வங்கி பல்வேறு நிவாரண திட்டங்களை இலங்கை மத்திய வங்கியின் ஆலோசனையின் பிரகாரம் தொடர்ந்திருந்தது. குறிப்பாக, 1 மில்லியன் ரூபாய்க்கு குறைந்த சகல பிரத்தியேக கடன்களுக்கும் மூன்று மாத கால கடன் மீளச் செலுத்தும் சலுகை வழங்கப்பட்டிருந்தது. ரூ. 50,000 வரையான உள்நாட்டு கடன் அட்டை கொடுக்கல் வாங்கல்களுக்கான ஆகக்கூடிய வருடாந்த வட்டி வீதம் 15% ஆக குறைக்கப்பட்டிருந்தது. மீளச் செலுத்த வேண்டிய ஆகக்குறைந்த தொகை 4% இலிருந்து 2% ஆக குறைந்திருந்தது. 2020 செப்டெம்பர் 30 ஆம் திகதி வரையான காலம் தாழ்த்திய கொடுப்பனவு கட்டணங்கள் நீக்கப்பட்டுள்ளன.
நடைமுறை மற்றும் சேமிப்பு கணக்கு (CASA)மீதிகளை கட்டியெழுப்பும் தனது நோக்கத்தின் பிரகாரம், யூனியன் வங்கி தொடர்ந்து தனது தீர்வுகளை கட்டியெழுப்பியிருந்தது. சிறுவர் சேமிப்பு கணக்குகள், முதலீட்டு திட்டங்கள் மற்றும் நிறுவனசார் CASA கணக்குகள் போன்றவற்றை கிளைகள் மற்றும் பிரத்தியேகமான உறவு பேண் முகாமையாளர்களினூடாக ஊக்குவித்திருந்தது. மார்ச் 31 ஆம் திகதியன்று வங்கியின் CASA விகிதம் 29% ஆக அதிகரித்திருந்தது.
சுகாதார நெருக்கடி நிலவிய காலப்பகுதியில், வங்கி தனது டிஜிட்டல் நாளிகைகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தது. குறிப்பாக ஒன்லைன் மற்றும் மொபைல் வங்கிச் சேவை வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு இலகுவாக அணுகுவதற்கு வசதி செய்திருந்தது. வங்கியின் BizDirect கட்டமைப்பு தொடர்ந்தும் கூட்டாண்மை மற்றும் SME வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி சேர்த்திருந்ததுடன், செலவு வினைத்திறன் வாய்ந்த பண முகாமைத்துவ தன்னியக்க மூலமாக இயங்கி, வியாபார கொடுக்கல் வாங்கல்களை ஒரு பகுதியிலிருந்து நிர்வகிப்பதற்கு பங்களிப்பு செய்திருந்தது.
யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், ”நாம் தற்போது எதிர்பாராத ஒரு நிலையில் இயங்கிய வண்ணமுள்ளோம். எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளையும், நிதிசார் உதவிகளையும் பெற்றுக் கொடுக்க முயற்சிகளை மேற்கொண்ட வண்ணமுள்ளோம். எமது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு என்பது எமக்கு மிகவும் முக்கியமானதாகும். எமது பணியாற்றும் சூழலில் நாம் உரிய ஏற்பாடுகளை செய்துள்ளோம். கடுமையான தூய்மை மற்றும் கிருமிநீக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களின் பிரகாரம், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த நிதிசார் உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்கான சகல முயற்சிகளையும் மேற்கொண்ட வண்ணமுள்ளோம். சவால்கள் நிறைந்த 1ஆம் காலாண்டை வங்கி எதிர்கொண்டிருந்ததுடன், சுகாதார இடர் நிலை காரணமாக நிதிப் பெறுபேறுகள் பாதிப்படைந்திருந்தன. இந்த நிலை வங்கியியல் துறைக்கு பெரும் பாதிப்பாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், வியாபார சமூகத்துக்கும் எதிர்வரும் மாதங்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும். தனிநபர், SME மற்றும் கூட்டாண்மை வாடிக்கையாளர்களுக்கு நாம் தொடர்ச்சியாக பங்களிப்பு வழங்க எதிர்பார்ப்பதுடன், விசேட நிவாரண திட்டத்தை அடுத்து வரும் மாதங்களில் அறிமுகம் செய்து, உறுதியான திரள்வு முகாமைத்துவ நிலையை வங்கியினுள் பேண திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.