அனுபவம் வாய்ந்த பொருளாதார நிபுணரும் பொதுக் கொள்கை தேர்ச்சியாளருமான கலாநிதி. (திருமதி) ரொஷன் ஆன் பெரேராவை யூனியன் வங்கியின் சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக நியமித்துள்ளதாக யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபை அறிவித்துள்ளது. 2021 ஜுலை 5 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
பொதுக் கொள்கை தேர்ச்சியாளராக 20 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள கலாநிதி. பெரேரா, நாணயக் கொள்கை மற்றும் நிதிக் கொள்கை தொடர்பான பிரச்சனைகள் பற்றி ஆலோசனை வழங்குவதில் பொறுப்பாளராக செயலாற்றியுள்ளார். இவரின் பரந்தளவு அனுபவத்தில் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தல் மற்றும் கண்காணித்தல் மற்றும் இடர் முகாமைத்துவ கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு உதவுதல் போன்றனவும் அடங்கியுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் பணிப்பாளராகவும் கலாநிதி. பெரேரா பணியாற்றியுள்ளதுடன், தற்போது இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பல்துறை முகவர் அமைப்புகளில் சுயாதீன ஆலோசகராகவும் பணியாற்றுகின்றார். Institute of Policy Studies மற்றும் Sri Lanka Institute of Directors ஆகிய அமைப்புகள் அடங்கலாக பல நிறுவனங்களில் பணிப்பாளர் சபை அங்கத்தவராக கடமையாற்றியுள்ளார். செங்கடகல ஃபினான்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் இவர் திகழ்கின்றார்.
அமெரிக்காவின் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தின் ஜோன் எஃவ் கென்னடி பாடசாலையின் எட்வர்ட் எஸ் மேசன் அங்கத்தவராக பொது நிர்வாகத்தில் முதுமானிப் பட்டத்தை அண்மையில் பூர்த்தி செய்திருந்தார். அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் PhD.பட்டத்தையும் பெற்றுள்ளதுடன், அமெரிக்காவின் சிக்காகோ இலினொயிஸ் பல்கலைக்கழகத்தில் சூழல்சார் புவியியலில் முதுமானிப் பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுமானிப் பட்டம் மற்றும் கலையில் இளமானிப் பட்டத்தையும் பூர்த்தி செய்துள்ளார்.

