யூனியன் வங்கியின் தவிசாளராக நிர்வாணா சௌத்ரி 2023 டிசம்பர் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஒக்டோபர் மாதம் யூனியன் வங்கியின் பணிப்பாளர் சபையில் நிறைவேற்று அதிகாரமற்ற, சுயாதீனமற்ற பணிப்பாளராக சௌத்ரி நியமிக்கப்பட்டிருந்தார். வியாபார முன்னோடி எனும் வகையில் ஆழமான அனுபவத்தை சௌத்ரி கொண்டுள்ளதுடன், CG கெப்பிட்டல் பார்ட்னர்ஸ் குளோபல் Pte Ltd இன் முகாமைத்துவ பணிப்பாளராகவும், நேபாளத்தின் CG Corp Group இன் கீழ் இயங்கும் பல்வேறு நிறுவனங்களின் தவிசாளராகவும் சௌத்ரி திகழ்கின்றார். நேபாளம், காத்மண்டு பல்கலைக்கழகத்திடமிருந்து வியாபார நிர்வாகத்தில் இளமானிப் பட்டத்தை கொண்டுள்ளதுடன், வியாபார நிர்வாகத்தில் முதுமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். அத்துடன், ஐக்கிய இராஜ்ஜியத்தின் லண்டன் பிஸ்னஸ் ஸ்கூல் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் Massachusetts Institute of Technology ஆகியவற்றில் தொழில்முயற்சியாண்மை முதுகலைக் கற்கையை பூர்த்தி செய்துள்ளார்.
பணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மலே முக்கர்ஜி மற்றும் சஞ்ஜய் போக்ரேல் ஆகியோரையும் யூனியன் வங்கி வரவேற்றுள்ளது.
கணக்காய்வு, இடர் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் 42 வருடங்களுக்கு மேலான அனுபவத்தை கொண்ட வங்கித்துறையைச் சேர்ந்தவராக மலே முக்கர்ஜி திகழ்வதுடன், 2023 ஒக்டோபர் மாதத்தில் யூனியன் வங்கியின் நிறைவேற்று அதிகாரமற்ற, சுயாதீனமற்ற பணிப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார். இந்தியாவின் வங்கித் துறையில் பல முக்கிய பதவிகளை முகர்ஜி வகித்துள்ளதுடன், தற்போது நேபாளத்தில் CG Corp Global பெருமளவு பங்குகளை தம் வசம் கொண்டுள்ள நபில் பாங்க் லிமிடெட்டின் பணிப்பாளராகவும் திகழ்கின்றார். இந்தியாவின், பனாராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பௌதீகவியலில் விஞ்ஞானவியல் முதுமானிப் பட்டத்தை (MSc) இவர் கொண்டுள்ளதுடன், இந்தியாவின், வங்கியியல் மற்றும் நிதியியல் இந்திய நிறுவகத்திடமிருந்து வங்கியியல் மற்றும் நிதியியலுக்கான உயர் கௌரவமும் வழங்கப்பட்டிருந்தது.
2023 நவம்பர் மாதம் யூனியன் வங்கியின் நிறைவேற்று அதிகாரமற்ற, சுயாதீனமற்ற பணிப்பாளராக சஞ்ஜய போக்ரேல் நியமிக்கப்பட்டார். நிதியியல் துறையில் பெருமளவு அனுபவத்தைக் கொண்டுள்ள போக்ரெல் ஒரு பட்டயக் கணக்காளர் என்பதுடன், முதலீட்டு நிர்வாகம், ஒன்றிணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள் மற்றும் சொத்துகள் முகாமைத்துவம் போன்றவற்றில் பெருமளவு அனுபவத்தையும் கொண்டுள்ளார். இவர் தற்போது, துபாய் CG Corp Global இன் ஒன்றிணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்களின் தலைமை அதிகாரியாக இயங்குகின்றார்.
இந்த நியமனங்களினூடாக யூனியன் வங்கிக்கு பெருமளவு அனுபவமும் நிபுணத்துவமும் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், வங்கியின் தலைமைத்துவத்தை பன்முகப்படுத்தவும், வலிமைப்படுத்தவும் மூலோபாய நகர்வாக அமைந்துள்ளது. வங்கிச் சேவைகளின் வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் சிறப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் வங்கி காண்பிக்கும் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாகவும் அமைந்துள்ளது.