யூனியன் வங்கியின் வருடாந்த புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வுகள் பத்தரமுல்ல, அபே கம பகுதியில் ஏப்ரல் 28 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தமிழ், சிங்கள சித்திரைப் புத்தாண்டை வரவேற்கும் வகையில் இந்த கொண்டாட்ட நிகழ்வுகள் இடம்பெற்றன. தலைமையகம் மற்றும் கிளைகளைச் சேர்ந்த ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு, புத்தாண்டு விளையாட்டுக்களில் பங்கேற்றனர்.
இந்த கொண்டாட்ட நிகழ்வுகள் களிப்பூட்டுவதாகவும், விறுவிறுப்பானதாகவும் அமைந்திருந்ததுடன், ஊழியர்கள் வர்ணமயமான பாரம்பரிய ஆடைகளை அணிந்து நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தனர். யூனியன் வங்கி புத்தாண்டு குமரர் மற்றும் குமரி தெரிவு இந்நிகழ்வில் நடுவர்கள் அடங்கலாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. பங்கேற்றிருந்தவர்கள் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தமையினால் நடுவர்களின் பணியும் கடினமானதாக அமைந்திருந்தது. எவ்வாறாயினும், பொரளை கிளையைச் சேர்ந்த துல்ஷான் இந்தீவர மற்றும் அட்டைகள் செயற்பாட்டு பிரிவின் தனேஷினி உதாரி 2023 ஆம் ஆண்டுக்கான யூனியன் வங்கி புத்தாண்டு குமரர் மற்றும் குமரியாக முடிசூடப்பட்டனர்.
புத்தாண்டு விளையாட்டுக்களில் மழை குறுக்கிட்ட போதிலும், அதனால் போட்டிகளுக்கு எவ்விதமான தடங்கல்கள் ஏற்படாத வகையில் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. நிகழ்வில் இணைந்து கொண்ட அனைவருக்கும் பாரம்பரிய உணவுடன், சுவை நிறைந்த இரவு உணவு புஃபே, இசை மற்றும் நடனத்தை அனுபவிக்க முடிந்தது. யூனியன் வங்கி விளையாட்டு கழகத்தினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
படம்: யூனியன் வங்கி புத்தாண்டு குமரர் மற்றும் குமரியாக தெரிவு செய்யப்பட்ட துல்ஷான் இந்தீவர மற்றும் தனேஷினி உதாரி ஆகியோரைக் காணலாம்.

