நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைத் துறை (SME) கருதப்படுவதுடன், இது பன்முகப்படுத்தப்பட்ட துறையாகவும் அமைந்துள்ளது. நாட்டின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு பெருமளவான ஆதரவை இந்தத் துறை வழங்குகின்றது. நாட்டின் மொத்தத் தேசிய உற்பத்திக்கு இந்தத் துறை பெருமளவில் பங்களிப்பு வழங்குவதுடன், பிரதான தொழில் வாய்ப்பு வழங்குநராக இயங்குகின்றது.
25 வருடங்களுக்கு மேலாக, நாட்டின் சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைத் துறைக்கு ஆதரவளித்து மேம்படுத்துவதற்கான சேவைகளை யூனியன் வங்கி வழங்கியுள்ளது. சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை வியாபாரங்களின் அபிவிருத்தி மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கு மேலதிகமாக, பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளிப்பதிலும் வங்கி பெருமை கொள்கின்றது. பெண் தலைமைத்துவ வியாபாரங்கள் மற்றும் பெண் தொழில்முயற்சியாளர்களை கட்டியெழுப்புவதில் தனது சேவைகளை தொடர்ச்சியாக வழங்குவதில் முக்கிய பங்காற்றுகின்றது. இந்தத் துறைக்கான நிதித் தீர்வுகளை வழங்குவதற்கு மேலதிகமாக, சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை கடன் வசதியினூடாக, பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு மானியங்களைப் பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்துகின்றது. இந்த கடன் வசதியினூடாக, பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு 10% மேலதிக கடன் பெறுமதிக் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதுடன், தெரிவு செய்யப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு 25% மேலதிக கடன் பெறுமதிகள் வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
யூனியன் வங்கியின் அபிவிருத்தி நிதியளிப்பு மற்றும் வியாபார மீட்சி/மறுசீரமைப்பு பிரதம முகாமையாளர் ஜனக எதிரிசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “பெண் தொழில்முயற்சியாண்மைகளுக்கு ஆதரவளித்து வலுவூட்டுகின்றமை தொடர்பில் யூனியன் வங்கி பெருமை கொள்கின்றது. நிதியளிப்பு, ஆலோசனை சேவைகள் மற்றும் திறன் விருத்தி போன்றன அடங்கலாக பல்வேறு ஆதரவுகளை வங்கி வழங்கியுள்ளது. சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாளர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட பயிற்சிப்பட்டறைகளில் பங்கேற்றிருந்தவர்களில் 60%க்கு அதிகமானவர்கள் பெண் தொழில்முயற்சியாளர்களாக இருந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். மானியங்களுக்கு மேலதிகமாக, பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு தமது அறிவை மேம்படுத்தவும் திறன்களை விருத்தி செய்து கொள்வதற்கும் மற்றும் வியாபார நிலைபேறாண்மை தொடர்பில் அறிந்து கொள்வதற்கும் வங்கியினால் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றன. நிதிவசதிகளைப் பெற்றுக் கொள்வதில் நிலவும் சிக்கல் நிலைகள் காரணமாக இந்தத் துறை பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்த வண்ணமுள்ளது. பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு தொடர்ச்சியாக பெருமளவு நிதிவசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன், அவர்களை ஊக்குவிப்பதற்கு ஆதரவளிப்பது தொடர்பில் இதர செயற்பாடுகளை முன்னெடுக்கவும் திட்டமிட்டுள்ளது. கடந்த வருடத்தில் ரூ. 350 இலட்சத்துக்கும் அதிகமான தொகையை பெண் தொழில்முயற்சியாளர்கள்/பெண் தலைமைத்துவத்தில் இயங்கும் வியாபாரங்களுக்காக வழங்கியுள்ளதுடன், அதனூடாக பெண் தொழில்முயற்சியாண்மையை ஊக்குவிப்பது மற்றும் பெண் தலைமைத்துவத்திலமைந்த சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மையை கட்டியெழுப்பவும் ஊக்குவித்துள்ளது.” என்றார்.
படம்: யூனியன் வங்கியின் அபிவிருத்தி நிதியளிப்பு மற்றும் வியாபார மீட்சி/மறுசீரமைப்பு பிரதம முகாமையாளர் ஜனக எதிரிசிங்க.

