2020 ஆம் ஆண்டின் தொற்றுப் பரவலின் தாக்கங்கள் பொருளாதாரத்தில் தொடர்ந்தும் காணப்பட்ட போதிலும், தனது தந்திரோபாயங்களை மீளமைத்து, மீட்சி மற்றும் வளர்ச்சியை நோக்கிய பயணத்தை யூனியன் வங்கி தொடர்ந்திருந்தது. இதனூடாக, நடப்பு ஆண்டின் முதல் அரையாண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை வங்கி பதிவு செய்திருந்தது. எவ்வாறாயினும், 2021 ஏப்ரல் மாதத்தில் மூன்றாம் அலைத் தாக்கம் ஆரம்பத்துடன், சவால்கள் தொடர்ந்தும் நிலவியதுடன், வியாபார வளர்ச்சியில் கட்டுப்பாடுகள் ஏற்பட்ட போதிலும், சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளமை விசேட அம்சமாகும்.
பிரயாணக் கட்டுப்பாடுகள் போன்றவற்றின் காரணமாக இரண்டாம் காலாண்டில் வங்கியியல் துறையின் செயற்பாடுகள் அழுத்தங்களுக்கு முகங்கொடுத்திருந்த போதிலும், யூனியன் வங்கியின் நோக்கத்துக்கமைவான செயற்பாடுகளினூடாக இரண்டாம் காலாண்டில் சிறந்த பெறுபேறுகள் பதிவு செய்யப்படுவதில் பங்களிப்பு வழங்கியிருந்தன. மூன்றாம் அலைத் தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக இலங்கை மத்திய வங்கியினால் அறிவிக்கப்பட்ட நிவாரணத் திட்டங்களின் காரணமாக நிலவிய குறைந்த AWPLR விகிதங்கள் காரணமாக வருமானங்கள் பாதிக்கப்பட்டது. 2021 மே மாதம் முதல் இந்த நிவாரணத் திட்டம் செயலுக்கு வந்ததுடன், வங்கியினால் உடனடியாக அமுல்ப்படுத்தப்பட்டது. இதனூடாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 2021 ஆகஸ்ட் 31ஆம் திகதி வரை முதல் மற்றும்/அல்லது வட்டி கொடுப்பனவுகள் மீதான சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்தது. சில்லறை, சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர்கள் மற்றும் கூட்டாண்மை பிரிவுகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு இந்த நிவாரண உதவித் திட்டம் வழங்கப்பட்டதுடன், கடனட்டைதாரர்களுக்கு காலம் தாழ்த்திய கொடுப்பனவு கட்டண விலக்கழிப்புகள், நிலுவைத் திகதி நீடிப்புகள் மற்றும் கொடுப்பனவு நெகிழ்ச்சித்தன்மைகள் போன்றனவும் வழங்கப்பட்டிருந்தன.
மேற்படி சவால்களுக்கு மத்தியிலும், முதல் அரையாண்டில் வங்கியின் தேறிய வட்டி வருமானம் (NII) என்பது ரூ. 2,103 மில்லியனாகவும், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4% அதிகரிப்பையும் பதிவு செய்திருந்தது. 2021 ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதிக்கான தேறிய வட்டி எல்லைப் பெறுமதி 3.44% ஆக வளர்ச்சியடைந்ததுடன், முன்னைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 3.23% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.
இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டல்களின் பிரகாரம், காலம் தாழ்த்திய கொடுப்பனவு மற்றும் இதர கட்டணங்கள் போன்றன பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு 2021 ஆகஸ்ட் மாதம் வரையில் விலக்கழிக்கப்பட்டுள்ளன. பொருளாதார செயற்பாடுகளில் வீழ்ச்சி மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் போன்றன கட்டண வருமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. எவ்வாறாயினும், தேறிய தரகு மற்றும் கட்டண வருமானம் முதல் அரையாண்டில் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 42% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. கட்டண வருமானத்தில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பு பதிவாகியிருந்ததனூடாக, 2020 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட கொவிட்-19 நிவாரண திட்டங்கள் மீதான தாக்கத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருப்பதுடன், முன்னைய ஆண்டின் வருமானத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
முதல் அரையாண்டில் வங்கியின் மொத்த இதர வருமானம் 18% இனால் வீழ்ச்சியடைந்து ரூ. 527 மில்லியனாக பதிவாகியிருந்தது. முதலீட்டு அலகு வருமானத்தின் வீழ்ச்சி 43% ஆக பதிவாகி ரூ. 310 மில்லியனாக பதிவாகியிருந்தமை காரணமாக இதில் அதிகளவு பங்களிப்பு வழங்கியிருந்தது. எவ்வாறாயினும், நாணயமாற்று வருமதிகள் 117% அதிகரிப்பை பதிவு செய்திருந்ததுடன், குறித்த காலப்பகுதியில் நாணயமாற்று மாற்றம் 8% ஆக பதிவாகியிருந்தது.
வெளியக சவால்களுக்கு மத்தியிலும், 2021 ஜுன் 30 ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் வங்கியின் தொழிற்படு வருமானம் என்பது ரூ. 3036 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. வங்கியில் கடுமையான செலவு முகாமைத்துவ நடவடிக்கைகள் காரணமாக தொழிற்படு செலவுகள் 6% இனால் குறைந்து ரூ. 1,809 மில்லியனாக பதிவாகியிருந்தன. 2021 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதிக்கான மதிப்பிறக்க இலாபம் என்பது ரூ. 1,227 மில்லியனாக காணப்பட்டது. இது 18% வளர்ச்சியைக் காண்பித்திருந்தது.
சவால்கள் நிறைந்த பொருளாதார சூழலில், 2020 டிசம்பர் மாதத்தில் பிரயோகித்திருந்த கருதுகோள்களின் பிரகாரம், வங்கி தொடர்ந்தும் தனது மதிப்பிறக்க மாதிரிகளை பின்தொடர்ந்திருந்தது. அதன் பிரகாரம், வங்கி இடர்கள் நிறைந்த துறைகளில் இயங்கும் வாடிக்கையாளர்களை (அதிகளவு கடன் இடர்கள் நிறைந்த தொழிற்துறைகள்) மதிப்பிறக்க கணிப்பீடுகளில் உள்வாங்கியிருந்தது. மேலும், எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பு கணிப்பீடுகளில் பாரிய-பொருளாதார நிலைவரம் தொடர்பில் அதிகளவு கரிசனை செலுத்தியிருந்தது. எனவே, வங்கியின் அசல் கடன் இழப்புகள் குறைவாக இருந்த போதிலும், இந்தக் காலப்பகுதியில் வங்கி குறிப்பிடத்தக்களவு ஒதுக்கீடுகளை பேணியிருந்ததுடன், முன்னைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் மதிப்பிறக்க கட்டணங்களில் 55% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது.
வெளியக சூழலில் காணப்பட்ட சவால்களுக்கு முகங்கொடுத்து, வங்கியினால் ஆரோக்கியமான நிதிப் பெறுபேறுகள் பதிவாகியிருந்தன. வரிக்கு முன்னைய இலாபம் மற்றும் துணை நிறுவனங்களின் இலாபம் போன்றன ரூ. 791 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 5% அதிகரிப்பாகும். வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் 44% இனால் அதிகரித்து ரூ. 455 மில்லியனாக பதிவாகியிருந்தது. 2021 முதல் அரையாண்டில் உறுதியான முன்னேற்றத்தை பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வங்கியின் தேறிய NPL விகிதம் 5.83% ஆக குறைந்திருந்தது. 2020 டிசம்பர் மாதத்தில் இந்தப் பெறுமதி 6.05% ஆக காணப்பட்டது.
ஜுன் 30 ஆம் திகதியன்று வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 121,244 மில்லியனாக காணப்பட்டது. வங்கியின் கடன்கள் மற்றும் கிடைப்பனவுகள் போன்றன ரூ. 70,656 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5% அதிகரிப்பாகும். வங்கியின் வைப்புகள் இருப்பு என்பது ரூ. 85,132 மில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3% அதிகரிப்பாகும். 2021 ஜனவரி முதல் ஜுன் வரையான காலப்பகுதியில், சராசரி CASA பெறுமதி 11% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. ஆரோக்கியமான CASA உட்பாய்ச்சலை பேணுவதற்கான முயற்சிகளில், வங்கியினால் பின்பற்றப்பட்டிருந்த கையகப்படுத்தப்பட்ட தந்திரோபாயங்கள் முக்கிய பங்காற்றியிருந்தன. அறிக்கையிடல் காலப்பகுதியில் வங்கியின் CASA விகிதம் 28.5% ஆக காணப்பட்டது.
வங்கி துரிதமான மூலதன போதுமை விகிதத்தை பேணியிருந்ததுடன், அறிக்கையிடல் காலப்பகுதியில் மொத்த மூலதன போதுமை விகிதமாக 15.88%ஐ பதிவு செய்திருந்தது.
வங்கியின் துணை நிறுவனங்களான UB ஃபினான்ஸ் மற்றும் NAMAL ஆகியனவும் வெளியக அழுத்தங்களுக்கு முகங்கொடுத்திருந்தன. வங்கி மற்றும் துணை நிறுவனங்களைக் கொண்ட குழுமம், 2021 முதல் அரையாண்டு காலப்பகுதியில் ரூ. 938 மில்லியனை வரிக்கு முந்திய இலாபமாக பதிவு செய்திருந்தது. குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபம் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 43% இனால் அதிகரித்திருந்தது. குழுமத்தின் மொத்த சொத்துக்கள் ரூ. 127,361 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில் 95%ஐ வங்கி தன்வசம் கொண்டிருந்தது. குழுமத்தினால் ஆரோக்கியமான மூலதன போதுமை விகிதம் 16.49% ஆக காணப்பட்டது.
ஆரோக்கியமான திரள்வு நிலைகளை பேணியிருந்ததுடன், சவால்களுக்கு மத்தியில் தடங்கலில்லாத செயற்பாடுகளை பேணியிருந்ததுடன், ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இயங்கும் போது ஊழியர் மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. விற்பனை, சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை மற்றும் கூட்டாண்மை வாடிக்கையாளர்களுடன் நெருக்கமான ஈடுபாடுகளைப் பேணியிருந்ததுடன், கிளைகள் மற்றும் உறவுமுறை முகாமையாளர்கள் தமக்கு காணப்பட்ட பிரத்தியேகமான சவால்களை இனங்கண்டு, அவசியமான வங்கியியல் உதவிகளை வழங்கியிருந்தனர். இதில், இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட நிவாரணத் திட்டத்தை முன்னெடுப்பதும் அடங்கியிருந்தது.
டிஜிட்டல் வங்கியியல் தொடர்பான தந்திரோபாய திட்டத்துக்கமைய, மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் தனது டிஜிட்டல் ஆற்றலை மேம்படுத்தியிருந்ததுடன், யூனியன் வங்கியின் மொபைல் வங்கிச் சேவை app மேம்படுத்தப்பட்டு ‘UBgo’ எனும் நாமத்தில் மீளறிமுகம் செய்யப்பட்டிருந்தது. Lanka QR நியமத்துக்கமைய தொடர்புபடுத்தப்பட்டு, அதன் பாவனையாளர்களுக்கு ஒப்பற்ற கொடுப்பனவு அனுபவத்தை வழங்குவதாக அமைந்துள்ளது. யூனியன் வங்கி மொபைல் App உடன் Lanka QR ஒன்றிணைப்பு செய்யப்பட்டு, வேகமான மற்றும் பாதுகாப்பான, பணமில்லாத கொடுப்பனவுகளை யூனியன் வங்கிக் கணக்குகளினூடாக நேரடியாக மேற்கொள்ளக்கூடிய வசதிகள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் வங்கியியல் அனுபவத்தை புரட்சிகரமான வகையில் மேம்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன. எதிர்காலத்தில் பிரதான வங்கி நாளிகையாக மொபைல் வங்கிச் சேவை app ஐ மேம்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியான முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது. தொழில்நுட்ப ரீதியில் செயற்படுத்தப்பட்ட வங்கியியல் சௌகரியங்களை வழங்குவதற்காக யூனியன் வங்கியினால் Missed Call வங்கிச் சேவையும் ஜுன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. எந்தவொரு மொபைல் தொலைபேசியிலும் அணுகக்கூடிய வகையில் இந்த தீர்வு அமைந்துள்ளது. SMS அடிப்படையிலான அறிவித்தல் சேவையாக அமைந்திருப்பதுடன், கணக்குதாரர்களுக்கு உடனடியாக தமது கணக்கு மீதிகளை தம் மொபைல் தொலைபேசிகளில் பெற்றுக் கொள்ளும் வசதியை வழங்குவதாக அமைந்துள்ளது.
மூன்றாம் அலைத் தொற்றுப் பரவல் மத்தியிலும் அத்தியாவசிய சேவையாக இயங்கியிருந்ததுடன், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பரிபூரண நடவடிக்கைகளை வங்கி உறுதி செய்திருந்தது. கிளை வலையமைப்பிலும், தலைமையகத்திலும் கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை வங்கி ஏற்படுத்தியிருந்ததுடன், வீடுகளிலிருந்து பணியாற்றும் வசதிகளையும் தெரிவு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கியிருந்தது. வாடிக்கையாளர்களுக்கு வங்கியின் ATM வலையமைப்பு, ஒன்லைன்/மொபைல் வங்கிச் சேவை கட்டமைப்பு மற்றும் 24 மணி நேர அழைப்பு நிலையம் ஆகியவற்றுடன் தொடர்பை ஏற்படுத்தும் வசதி போன்றவற்றினூடாக பாதுகாப்பான வங்கிச் சேவை அனுபவத்தை வழங்குவதை வங்கி உறுதி செய்திருந்தது. பயணக் கட்டுப்பாடுகள் நிலவிய காலப்பகுதியிலும் அத்தியாவசிய வங்கியியல் சேவைகளை மேற்கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட கிளைகள் இயக்கத்தில் இருந்தன.
வங்கியின் முதல் அரையாண்டு காலப்பகுதியின் நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் யூனியன் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “2021 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டு பகுதியில் வங்கியின் வளர்ச்சியில், மூன்றாம் அலைத் தாக்கம் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. மூன்றாம் அலைத் தாக்கத்துடன், இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட நிவாரண வசதிகளை பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதில் நாம் கவனம் செலுத்தியிருந்தோம். இந்த சவால்கள் நிறைந்த காலப்பகுதியில், வங்கியின் வருமானத்தை நிர்வகித்திருந்ததுடன், ஆரோக்கியமான திரள்வு நிலை, உறுதியான மூலதன போதுமை விகிதம் போன்றவற்றை பேணுவதில் வங்கி கவனம் செலுத்தியிருந்தது. வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் வங்கி கவனம் செலுத்தியிருந்தது. எஞ்சியிருக்கும் காலப்பகுதியில் சகல பிரிவுகளையும் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு அவசியமான நிதிச் சேவைகளை பெற்றுக் கொடுத்து, வளர்ச்சியை நோக்கிய நகர்வுகளை நாம் மேற்கொள்வதுடன், எமது ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சகல முற்காப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்.” என்றார்.

