சவால்கள் நிறைந்த 2021 மூன்றாம் காலாண்டில் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

கொவிட்-19 தொற்றுப் பரவலின் மூன்றாம் அலைத் தாக்கம் ஆகஸ்ட், செப்டெம்பர் மாதங்களில் பிரகடனப்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வங்கிக் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெறுவதில் தாக்கங்களை ஏற்படுத்தியிருந்ததுடன், பொருளாதார சவால்கள் மற்றும் அந்நியச் செலாவணி இருப்புகள் போன்றவற்றில் ஏற்பட்ட தாக்கங்கள் காரணமாக ஒட்டுமொத்த வியாபார கட்டமைப்பும் தொடர்ந்தும் வரையறைகளுடன் இயங்கியிருந்தது. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட கடன் பெறுநர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட கடன் மீளச் செலுத்தும் சலுகைக் காலம் 2021 செப்டெம்பர் மாதத்தில் மேலும் நீடிக்கப்பட்டது.

இவ்வாறான பெரும் சவால்கள் நிறைந்த சூழலிலும், யூனியன் வங்கி உறுதியான திரள்வு நிலையை பேணியிருந்தது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில், வங்கியின் சராசரி நிலையான வைப்புகள் உறுதியாக காணப்பட்டதுடன், சராசரி CASA பெறுமதி முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 9% இனால் அதிகரித்து ரூ. 23,854 மில்லியனாக பதிவாகியிருந்தது.

2021 செப்டெம்பர் மாதத்தில் ஃபிட்ச் நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட பிந்திய மீளாய்வின் போது, வங்கியின் தரப்படுத்தல் BBB(-) என்பதாக மீள உறுதி செய்யப்பட்டிருந்தது. இதில் உயர் திரள்வுத் தன்மை, பெருமளவு உயர்ந்த மூலதனவாக்கம் மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழிற்படு சூழலில் வளர்ச்சிக்கான வாய்ப்பு போன்றன பங்களிப்பு வழங்கியிருந்தன.

3ஆம் காலாண்டுக்கான தேறிய வட்டி வருமானம் (NII) வீழ்ச்சியை பதிவு செய்திருந்தது. இதில், பாரிய பொருளாதார சூழலில் காணப்பட்ட தாக்கம், தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கடன் மீளச் செலுத்தல் சலுகைக் காலத்தை நீடித்திருந்தமை மற்றும் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் AWPLR இன் பெறுமதிகள் 280 அடிப்படைப் புள்ளிகளால் வீழ்ச்சியடைந்திருந்தமை போன்றன பங்களிப்பு வழங்கியிருந்தன. இதன் பெறுபேறாக, ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் தேறிய வட்டி வருமானம் (NII) என்பது ரூ. 3,078 மில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் எல்லையளவு அதிகரிப்பாகும்.

உரிய காலப்பகுதியில் தந்திரோபாய பின்பற்றல்களினூடாக கட்டண வருமானம் என்பது முறையாக நிர்வகிக்கப்பட்டிருந்தது. இதனூடாக, அறிக்கையிடப்பட்ட காலப்பகுதியில் முன்னைய வருடத்துடன் ஒப்பிடுகையில் 31 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து, ரூ. 612 மில்லியனாக பதிவாகியிருந்தது.

சவால்கள் நிறைந்த பொருளாதார சூழலில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து, விநியோக/கேள்வி கட்டமைப்புகளில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நாணயப் பரிமாற்று தளம்பல் காரணமாக திறைசேரி வினைத்திறனும் பாதிக்கப்பட்டிருந்ததுடன், திறைசேரி மற்றும் நிதிச் சந்தைகளின் வருமானமீட்டும் வாய்ப்புகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. 2020 ஆம் ஆண்டில் இந்தப் பெறுமதி அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக 2ஆம் மற்றும் 3ஆம் காலாண்டுகளில் இந்தப் பெறுமதி உயர்ந்திருந்தது. இதன் விளைவாக வங்கியின் வர்த்தக மற்றும் இதர வருமானங்கள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்திருந்தன. 

செப்டெம்பர் மாத நிறைவில் வங்கியின் தொழிற்பாட்டு வருமானம் ரூ. 4,397 மில்லியனாக பதிவாகியிருந்தது. மொத்த தொழிற்பாட்டு செலவீனங்கள் வங்கியினால் முறையாக நிர்வகிக்கப்பட்டிருந்ததுடன், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து ரூ. 2,730 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியின் மதிப்பிறக்கத்துக்கு முன்னரான இலாபங்கள் ரூ. 1,667 மில்லியனாகும்.

சவால்கள் நிறைந்த பொருளாதார சூழல் காரணமாக, வங்கி தொடர்ந்தும் தனது மதிப்பிறக்க மாதிரிகளை 2020 டிசம்பர் மாதத்தில் பின்பற்றியிருந்த அதே எதிர்பார்ப்புகளுடன் பேணியிருந்ததுடன், இடர்கள் நிறைந்த தொழிற்துறைகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களை மதிப்பிறக்க கணிப்பீடுகளில் உள்வாங்கியிருந்தது. எனவே, வங்கியின் அசல் கடன் இழப்புகள் குறைவாக காணப்பட்டாலும், நிர்வாக மேற்பார்வை பணிகளினூடாக, பெருமளவு ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

தொடர்ச்சியான சவால்கள் நிறைந்த பாரிய பொருளாதார சூழலில், வங்கி தனது துணை நிறுவனங்களின் மீதான உரிமையாண்மை ஈடுபாட்டுடன் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 1,102 மில்லியனை பதிவு செய்திருந்தது. வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 614 மில்லியனை பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 12 சதவீத வளர்ச்சியாகும்.

வங்கியின் நிகர தொழிற்படாக் கடன் விகிதம் 5.79சதவீதமாக வளர்ச்சியடைந்தது. 2020 ஆம் ஆண்டில் இந்தப் பெறுமதி 6.05 சதவீதமாகக் காணப்பட்டது. வலுவிழந்த பொருளாதார சூழலில், தொழிற்படா கடன்களைக் கட்டுப்படுத்தி வங்கி தனது இலாகா தரத்தை பேணுவது தொடர்பான செயற்பாடுகளில் தொடர்ந்தும் கவனம் செலுத்தியிருந்தது. 

செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 118,682 மில்லியனாக பதிவாகியிருந்தது. கடன்களும் வருமதிகளும் ரூ. 69,708 மில்லியனாக காணப்பட்டதுடன், வைப்பு இருப்பு என்பது ரூ. 85,259 மில்லியனாக காணப்பட்டது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் 3 சதவீதத்தால் விரிவடைந்திருந்தது.

வங்கி தொடர்ந்தும் தனது மூலதன போதுமை விகிதங்களை ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுடன் ஒப்பிடுகையில் உயர்ந்த நிலையில் பேணியிருந்ததுடன், அறிக்கையிடல் திகதியன்று துரித மொத்த மூலதன போதுமை விகிதமாக 15.20 சதவீதத்தை அறிக்கையிட்டிருந்தது.

வங்கி மற்றும் இரு துணை நிறுவனங்களான UB ஃபினான்ஸ் கம்பனி லிமிடெட் மற்றும் நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் போன்றன வரிக்கு முந்திய இலாபமாக ரூ. 1,325 மில்லியனை பதிவு செய்திருந்தன. குழுமத்தின் வரிக்குப் பிந்திய இலாபம் முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 17சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தன. குழுமத்தின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 125,163 மில்லியனாக காணப்பட்டதுடன், இதில் 95சதவீதத்தை வங்கி தன்வசம் கொண்டிருந்தது. குழுமம் 15.67 சதவீதம் எனும் ஆரோக்கியமான பிரதான மூலதன விகிதத்தை பேணியிருந்தது.

வங்கியின் கூட்டாண்மை, சிறிய நடுத்தரளவு வங்கியியல் மற்றும் நுகர்வோர் வங்கிச் சேவைப் பிரிவுகள் போன்றன தொடர்ந்தும் வளர்ச்சியைப் பதிவு செய்திருந்ததுடன், வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் பொருத்தமான நிதித் தீர்வுகளை வழங்கியிருந்தன. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில், வங்கி தனது டிஜிட்டல் செயற்பாடுகளை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியிருந்ததுடன், ‘UBgo’ எனும் நாமத்தில் மேம்படுத்தப்பட்ட தனது mobile app ஐ அறிமுகம் செய்திருந்தது. QR கொடுப்பனவுகளுடன் இது வலுவூட்டப்பட்டுள்ளதுடன், JustPay இனால் உடனடி கொடுப்பனவுகளை மேற்கொள்ளக்கூடியதாக அமைந்துள்ளது. இதனூடாக வங்கிச் செயற்பாடுகளை மேற்கொள்வது மேலும் இலகுபடுத்தப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்றாம் காலாண்டு நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் வங்கியின் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரஜித் விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “நிலவும் சவால்கள் நிறைந்த சூழலை நாம் கடந்து வரும் நிலையில், நாடு படிப்படியாக மீளத் திறக்கப்படுவதுடன் எழும் வாய்ப்புகளை உயர்ந்தளவில் பயன்படுத்திக் கொள்ள எதிர்பார்க்கின்றோம். அதனூடாக, வங்கியின் தந்திரோபாய இலக்குகளை எய்தக்கூடியதாக இருக்குமென கருதுகின்றோம். கட்டமைக்கப்பட்ட நிதித் தீர்வுகளை வழங்குவதற்காகவும், எமது ஊழியர்களின் மற்றும் வாடிக்கையாளர்களின் நலன்களையும் உறுதி செய்வதற்காகவும் நாம் முக்கியத்துவம் வழங்கி செயலாற்றுகின்றோம். இலாபத்தை எய்துவது மற்றும் இலாகாக்களை நிர்வகித்து, ஆரோக்கியமான திரள்வு நிலையை பேணுவது என்பது வங்கியின் பிரதான கவனம் செலுத்தும் பகுதிகளாக அமைந்துள்ளன.” என்றார்.

வங்கிகள்

  • Amana Bank PLC
  • Bank of Ceylon
  • Cargills Bank Ltd
  • Citibank
  • Commercial Bank of Ceylon PLC
  • DFCC Bank
  • Hatton National Bank PLC
  • HDFC Bank
  • HSBC Ltd
  • National Development Bank PLC
  • Nations Trust Bank
  • Pan Asia Banking Corporation
  • People’s Bank
  • Public Bank Berhard
  • Sampath Bank PLC
  • Seylan Bank PLC
  • Standard Chartered Bank

நிறுவனங்கள்

  • Merchant Bank of Sri Lanka Finance
  • Central Finance PLC
  • Commercial Leasing and Finance PLC
  • HNB Finance
  • LB Finance PLC
  • People’s Leasing and Finance PLC
  • Softlogic Finance Plc
  • Singer Finance (Lanka) PLC