2025 நிதியாண்டில் யூனியன் வங்கி உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் வங்கிகளில் ஒன்றாக, குழுமத்தின் வரிக்கு முந்தைய இலாபம் ரூ. 2.2 பில்லியனை எய்தியிருந்ததுடன், வரிக்கு பிந்திய இலாபம் இரண்டு மடங்கு அதிகரித்து ரூ. 660 மில்லியனாக பதிவாகியிருந்தது. வங்கியினால் முன்னெடுக்கப்பட்டிருந்த மூலோபாய மாற்றியமைப்புத் திட்டங்களின் வெற்றிகரமான செயற்பாடுகளின் பிரதிபலிப்பாக இவை அமைந்திருந்தன.
வங்கியின் மொத்த வருமானம் ரூ. 18.2 பில்லியனாக உயர்ந்திருந்தது. இதில் தேறிய வட்டி வருமானம் (NII) ரூ. 5,638 மில்லியன் மற்றும் ரூ. 1,545 மில்லியன் தேறிய தரகு மற்றும் கூலி வருமானங்கள் பங்களிப்பு வழங்கி பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் மீட்சியுடனான வருமான இருப்பை பிரதிபலித்திருந்தன. இந்த விரிவாக்கமானது, வைப்புத் தளத்தின் வலுவான வளர்ச்சியினால் மேலும் வலுவூட்டப்பட்டுள்ளது. இது 15% வளர்ச்சியுடன் 118.8 பில்லியன் ரூபாயினை எட்டியுள்ளதுடன், வங்கியின் மீதான பொதுமக்களின் ஆழமான நம்பிக்கையையும் மற்றும் வங்கியின் சுறுசுறுப்பான விற்பனை அடிபப்டையில் வழிநடத்தப்படும் கலாசாரத்தின் வெற்றியையும் இது வெளிப்படுத்தியுள்ளது. எதிர்காலக் கடன் வழங்கல்களுக்கான நிலையான அடித்தளத்தை உறுதிப்படுத்தும் வகையில், வங்கியானது 13.2% என்ற சிறந்த மொத்த மூலதன விகிதத்தைப் பேணி வருவதுடன், இது ஒழுங்குமுறைத் தேவைகளை விடவும் கணிசமானளவு உயர்வான மட்டமாகும். குழுமத்தின் மொத்தச் சொத்துக்கள் 155.6 பில்லியன் ரூபாயிலிருந்து 184.8 பில்லியன் ரூபாயாக 19% வளர்ச்சியைக் கண்டுள்ளது. தேறிய கடன் பிரிவு 36% இனால் உயர்ந்து ரூ. 110.8 பில்லியனாக பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டில் வங்கி பதிவு செய்திருந்த முன்னேற்றகரமான போக்கை பேணியிருந்தது.
யூனியன் வங்கி குழுமமானது, UB பினான்ஸ் பிஎல்சி மற்றும் நஷனல் அசெட் மனேஜ்மன்ட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது.
படங்கள்;
தினேஷ் வீரக்கொடி, தவிசாளர், யூனியன் வங்கி
தில்ஷான் ரொட்ரிகோ, பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, யூனியன் வங்கி

